சென்னை: தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகியும், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.யசோதா உடல்நலக் குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 4 முறை பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக காங்கிரஸ் கட்சியில் மூத்த நிர்வாகியான டி.யசோதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
டி.யசோதா கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் காலமானார்.
இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும்,முன்னாள் சட்டப்பேரவைரே காங்கிரஸ் துணை தலைவரும்,காமராஜர் அறக்கட்டளையின் அறங்காவலருமான டி.யசோதா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த்தேன். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும் என்று தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பெருந்தலைவர் வழிவந்தவர், அன்னை சோனியா காந்தியின் நம்பிக்கை, அறக்கட்டளையின் அறங்காவலர், மூத்த தலைவி யசோதா அவர்கள் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.