முன்னாள் மத்திய இணை அமைச்சர் மறைவு: அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அஞ்சலி

முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் எம்.ஆர்.ஜனார்த்தனனுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனின் உடலுக்கு மலர்வளைவம் வைத்து அஞ்சலி செலுத்தும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு உள்பட அதிமுகவினர்.
மறைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனின் உடலுக்கு மலர்வளைவம் வைத்து அஞ்சலி செலுத்தும் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு உள்பட அதிமுகவினர்.

 

கோவில்பட்டி:  முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் எம்.ஆர்.ஜனார்த்தனனுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன்(91) உடல்நலக்குறைவு காரணமாக, தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான கடம்பூருக்கு கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவரது உடலுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற வடக்கு மாவட்ட இணைச் செயலர் சுப்புராஜ், ஒன்றியச் செயலர்கள் வினோபாஜி, வண்டானம் கருப்பசாமி, காந்தி காமாட்சி, கழுகுமலை நகர அதிமுக செயலர் முத்துராஜ், கயத்தாறு நகரச் செயலர் கப்பல் ராமசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அரசியல் கட்சியினர், பொதுமக்கள்  திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, செய்தியாளரகளிடம் பேசுகையில்,  ஒரு அரசியல்வாதி எப்படி வாழ வேண்டும்  என்பதற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் கடம்பூர் ஜனார்த்தனன். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவர் வழி நின்று, அண்ணாவின் தம்பியாக, எம்.ஜி.ஆரின் நம்பிக்கையாக, ஜெயலலிதாவின் விஸ்வாசியாக இருந்தவர்.

பாரம்பரியத்தின் மூத்த தலைவராக திகழ்ந்தவர் கடம்பூர் ஜனார்த்தனன். திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் 1984, 1989, 1991 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1998 தேர்தலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கடம்பூர் ஜனார்த்தனன், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய நிதித் துறை இணை அமைச்சராக 1999 வரை பணியாற்றினார்.

அதிமுக பொதுக்கூட்டங்களில் சிறப்பாகப் பேசக்கூடியவர். அனைத்திந்திய அதிமுக மாவட்டச் செயலராக, தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்து மக்களுக்கு எளிதாக கருத்துக்களை கொண்டு செல்வதில் வல்லவராக விளங்கினார். தனது ஆசான் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் விருது வாங்க வேண்டும் என்பதை வாழ்நாள் ஆசையாக கொண்டிருந்தார். இந்தாண்டு பேரறிஞர் அண்ணா விருது வழங்க பரிந்துரக்கப்பட்ட நிலையில், அவர் மறைந்தது வருத்தமளிக்கிறது.

அவருடைய மறைவு அதிமுகவுக்கு பெரிய இழப்பு. நான் 2  முறை சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோது எனது பெயரை முன்மொழிந்தவர். திராவிட பாரம்பரியத்தில் வந்த அவருடைய மறைவு அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு என்றார்  அமைச்சர் கடம்பூர் செ.ராஜு. 

முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன், ஒன்றியச் செயலர் பொன்னுச்சாமி,  தேமுதிக மாவட்டச் செயலர் அழகர்சாமி, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், முன்னாள் எம்.பி. அப்பாத்துரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் அய்யலுசாமி உள்பட பல்வேறு அரசியல் அஞ்சலி செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com