அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம் பனையூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் பஞ்சாலைத் தொழிலாளர் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், ஓட்டுநர் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
திருச்சுழி வட்டம் செல்லையாபுரத்திலிருந்து வழக்கமாக பந்தல்குடி தனியார் பஞ்சாலைப் பேருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு செல்லுமாம். ஞாயிற்றுக்கிழமை காலையும் அப்பேருந்து செல்லையா புரத்திலிருந்து ஓட்டுநர் உள்பட 11 பேருடன் சென்றுகொண்டிருந்தபோது பனையூர் சாமிநத்தம் விலக்கு அருகே எதிர்பாராவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், செல்லையாபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பூசையா (29) என்பவரும், செல்லையாபுரத்தைச் சேர்ந்த சின்னராசு மகன் ஸ்ரீகாந்த் (18) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஓட்டுநர் உள்பட 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்து விபத்து குறித்து வழக்குப்பதிந்த திருச்சுழி காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.