திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனி பிரவேசம் செய்வதை தொடர்ந்து சனிப் பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இங்குள்ள பொங்குசனீஸ்வரர் கையில் ஏர் கலப்பையுடன் அருள்பாலித்து வருவது தனிச்சிறப்பு மிக்கதாகவும்.
இவ்வாலயத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி பொங்கு சனீஸ்வரர் வழிபட்டால் சனி தோஷத்தில் இருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம்.
நளச்சக்கரவர்த்தி திருநள்ளாறில் உள்ள சனீஸ்வரரை வழிபட்ட பின்னர் திருக்கொள்ளிக்காடு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி பொங்கு சனீஸ்வரர் வழிபட்டபின்னர் தான் இழந்த நாடு நகரங்களை திரும்பக் கிடைக்கப் பெற்றார் என்பது ஐதீகம்.
சனிப் பெயர்ச்சியை ஒட்டி பொங்கு சனீஸ்வரர் ஆலயத்தில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் காலை ஏழு மணிக்குப் பின்னர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்களுக்கு அர்ச்சனை போன்ற எவ்வித பரிகாரங்களும் செய்ய அனுமதிக்கப்படவில்லை .
சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே 19 வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு திருவாரூர் துணை ஆணையர் ஹரிஹரன் ஆலய தக்கார் ராஜா செயல் அலுவலர் சுரேந்தர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் தஞ்சை சரக காவல்துறை தலைவர் ராகேஷ் மீனா ஆகியோர் உத்தரவின்பேரில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்தி காவல் துணை கண்காணிப்பாளர் கள் பழனிச்சாமி தேன்மொழி வேல் ,ரபு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
திருத்துறைப்பூண்டி திருவாரூர் மன்னார்குடி ஆகிய ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.