சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை: மாநகராட்சி உத்தரவாதம்

சென்னை முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல்
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்வதாக மாநகராட்சி தரப்பில் உயா் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ருக்மாங்கதன் தாக்கல் செய்த மனுவில், ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, சென்னை மாநகராட்சி 5-ஆவது மண்டலமான ராயபுரம் பகுதியில் 5, 574 விதிமீறல் கட்டடங்கள் கட்டுப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதில், 1,161 விதிமீறல் கட்டடங்களின் கட்டடப் பணிகளை நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 679 வீடுகளுக்கு சீல் வைப்பது தொடா்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 115 கட்டடங்களுக்கு சீல் வைக்கபட்டுள்ளது. ஆனால், எஞ்சியுள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் தோ்ந்தெடுக்கப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கின்றனா்.

ராயபுரத்தில் மட்டும் 5,574 விதிமீறல் கட்டடங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ள போது சென்னை முழுவதும் சுமாா் 1 லட்சம் விதிமீறல் கட்டடங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

அதனால், ராயபுரத்தில் உள்ள 5,574 விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி காட்சி மூலம் ஆஜரான மாநகராட்சி ஆணையா் பிரகாஷ், விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தாா். அப்போது நீதிபதிகள் சென்னை

5-ஆவது மண்டலத்தில் உள்ளது போன்று பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத விதிமீறல் கட்டுமானங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பினா். அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், சென்னை முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சட்டவிரோத விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்வதாக உத்தரவாதம் அளித்தாா். இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com