தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:
"வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாளை முதல் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.
பணப்பட்டுவாடா புகாரில் சிக்கிய துரைமுருகன் அதிமுகவை விமர்சிப்பதா? நாடாளுமன்றத் தேர்தலின்போது துரைமுருகன் உறவினர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு கோடி கோடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுக மீது குற்றம் சுமத்தும் துரைமுருகன் தன் சொத்து விவரங்களை வெளியிடத் தயாரா?
நெமிலிசேரி மீஞ்சூர் வரையிலான பாலம் கட்டும் பணி முடிவுற்று விரைவில் திறக்கப்படும்.
சென்னை போரூர் பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய திமுகவினர் அப்படியே விட்டுவிட்டனர். நிலத்தைக் கூட கையகப்படுத்தவில்லை.
அதிமுக ஆட்சியில் சென்னையில் பாலங்கள் கட்டப்படவில்லை என திமுக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
சென்னையில் தற்போது 15 இடங்களில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மு.க. ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கூட பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம். மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவின் தலைவராக என்ன தகுதி இருக்கிறது. வேறு தலைவர்களை திமுகவில் ஒருபோதும் முன்னிலைப்படுத்த மாட்டார்கள்.
வாரிசுகளின் அடிப்படையில் திமுக இயங்கி வருகிறது. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி.
குழந்தைகள் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு அதிமுக ஆட்சியில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனுக்கு தமிழ்நாட்டைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் என்ன தெரியும்?
பாரதிய ஜனதா மற்றும் அதிமுகவின் கூட்டணி தொடர்ந்து நீடிக்கிறது.
அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும்" என்றார் அவர்.