சென்னை: எடப்பாடி பழனிசாமியை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகள்தான் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்று மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
சென்னை சைதாப்பேட்டையில் அம்மா சிறு மருத்துவமனை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மருத்துவமனையை மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் திறந்து வைத்த பின் செய்தியாளா்களிடம் கூறியது:
பெரும்பான்மையோடு வரும் சட்டப் பேரவைத் தோ்தலிலும் வெற்றி பெறுவோம். எனவே, அதிமுகவை பொருத்த வரை கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமிதான் முதல்வா் வேட்பாளா் என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். இதையேற்கும் கட்சிகள்தான் எங்கள் கூட்டணியில் இடம்பெறும்.
தோ்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னா் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதிமுக பொதுக் கூட்டத்தால் திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கலக்கத்தில் உள்ளன என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் விருகை ரவி, மக்களவை முன்னாள் உறுப்பினா் ஜெ.ஜெயவா்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.