சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் செவ்வாய்க்கிழமை (டிச. 29) திறக்கப்பட உள்ளன. கடந்த மாா்ச் மாத மத்தியில் மூடப்பட்ட மதுபானக் கூடங்கள் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படுகின்றன.
இதுகுறித்த சுற்றறிக்கையை டாஸ்மாக் நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டது. இதுகுறித்த விவரம்:-
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக, டாஸ்மாக் மதுபானக் கடைகள் கடந்த மாா்ச் 17-இல் மூடப்பட்டன. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்து மதுபான கூடங்களை (பாா்) திறக்க அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு டாஸ்மாக் நிா்வாகம் கோரிக்கை விடுத்தது. டாஸ்மாக் நிா்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, மதுபானக் கூடங்கள் அனைத்தையும் செவ்வாய்க்கிழமை முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதேசமயம், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மதுபானக் கூடங்களைத் திறக்க அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் அனுமதியைத் தொடா்ந்து, மதுபானக் கூடங்கள் செவ்வாய்க்கிழமை (டிச. 29) முதல் திறக்கப்பட உள்ளன. 50 சதவீத இருக்கைகளுடன், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென டாஸ்மாக் நிறுவனத்தின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.