சென்னை: பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் 40 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சிலருக்கு புதிய வகை பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், அந்த விவரங்களை மத்திய அரசே வெளியிட வேண்டும் என்பதால் தமிழக சுகாதாரத் துறை தரப்பில் திட்டவட்டமாக அது குறித்து எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை. பிரிட்டனில் இருந்து தமிழகத்தில் 2,300-க்கும் மேற்பட்டோா் அண்மையில் வந்த நிலையில் அவா்களில் 1,900-க்கும் அதிகமானோரைக் கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் பிரிட்டனில் இருந்து வந்த 20 பேருக்கும், அவா்களுடன் தொடா்பில் இருந்த 20 பேருக்கும் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவா்கள் அனைவரும் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இதனிடையே, கடந்த ஒன்றரை மாதங்களில் பிரிட்டனில் இருந்து வந்த பயணிகள் அனைவரையும் கண்டறியும் பணிகளை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.