அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பான..
அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் 15 பேர் குற்றவாளிகள்: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை விடுதலை செய்து எஞ்சிய 15  பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட (போக்சோ) நீதிமன்றம் தண்டனை விவரங்கள் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக இருந்த ரவிக்குமார், காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம்  கைது செய்தனர். இவர்களை குண்டர் தடுப்புக் காவல் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ஆம் தேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணையை மகளிர் நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த நிலையில் மகளிர் நீதிமன்றத்திலிருந்து விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க மகளிர் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞராக என்.ரமேஸ் நியமிக்கப்பட்டார். இதே போன்று குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் தரப்பில் தனித்தனியாக வழக்குரைஞர்களும் ஆஜராகி வாதிட்டனர்.  

இந்த வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசு தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். மேலும் 120 வழக்கு ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. 11 மாதங்களுக்கு மேலாக நடந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் சிறையிலேயே உயிரிழந்துவிட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் விவரங்கள்:

1)  ரவிகுமார்( 56)

2)   சுரேஷ் (32)

3)  ராஜசேகர்(48)

4)  எரால்பிராஸ்(58)

5) அபிஷேக் ( 28)

6)  சுகுமாரன் (60) 

7) முருகேசன்(54)

8) பரமசிவம் (60)

9) ஜெய்கணேஷ் (23)

10)  பாபு (36) (இறந்து விட்டார்)

11) பழனி(40)

12) தீனதயாளன்(50)

13) ராஜா (32)

14) சூர்யா(23)

15) குணசேகரன்(55) (விடுதலை)

16) ஜெயராமன்(26)

17) உமாபதி(42)

கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது: 

இந்திய தண்டனைச் சட்டம் 354 – பி, 366 ( பாலியல் வன்கொடுமை) 376 – ஏ பி ( காயம் ஏற்படுத்துதல்) 376 பி டி ( கூட்டு பாலியல் வன்கொடுமை) 307 (கொலை முயற்சி),  506 (2) கொலை மிரட்டல் 
ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழும், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாரை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் 10 மற்றும் 12-ஆவது பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, 12 வயதுக்கு குறைவான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குற்றவியல் திருத்தச் சட்டத்தின் புதிதாக நிறைவேற்றப்பட்ட பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் குற்றம்சாட்டுள்ள 15 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, குணசேகரன் என்பவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. 15 பேருக்கான தண்டனை விவரங்கள் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com