போலி பத்திரம் மூலம் 50 சென்ட் நிலம் ஏமாற்றப்பட்ட விவகாரத்தில் புகார் ஏற்க மறுப்பதாகக் கூறி அந்தோணிசாமி என்பவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார்.
திண்டுக்கல் அடுத்துள்ள வடகாடு பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி (59). இவரது மனைவி இன்பெண்ட் ரோசாலி (50), இவர்களது மகன்கள் ஸ்டீபன் கஸ்பார் மற்றும் ஆண்ட்ரூஸ் ராஜா ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர்.
இந்த நிலையில், ஆட்சியர் அலுவலக நுழைவாயில் அருகே தாங்கள் கொண்டு வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் பெட்ரோல் கேனை பறித்து அவர்களது முயற்சியை தடுத்து நிறுத்தினார்.
இதுதொடர்பாக, போலீஸார் நடத்திய விசாரணையில் வடகாட்டு பட்டிப் பகுதியைச் சேர்ந்த நபரிடம் 1.17 ஏக்கர் நிலத்தை அந்தோணிசாமி கடந்த 2007ஆம் ஆண்டு வாங்கியதாகத் தெரிவித்தார்.
அந்த நிலத்தில் 50 சென்ட் போலி பத்திரம் தயாரித்து மற்றொருவருக்கு அதன் பழைய உரிமையாளர் விற்பனை செய்துவிட்டார். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தற்கொலைக்கு முயன்றதாக அந்தோணிசாமி குடும்பத்தினர் தெரிவித்தனர்.