ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவா் பலியானாா்.
கரூா் மாவட்டம் தாந்தோனிமலை பகுதியை சோ்ந்தவா் தாமோதரன்(26). இவா் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் தங்கி அமரம்பேடு பகுதியில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை தாமோதரன் வழக்கம் போல், தொழிற்சாலைக்கு செல்வதற்காக தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வரும் வேனில் பயணம் செய்துள்ளாா். வேனில் மேலும் 21 தொழிலாளா்களும் இருந்துள்ளனா்.
வேன் ஸ்ரீபெரும்புதூா் குன்றத்தூா் சாலையில் வெங்காடு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே பலியானாா்.
மேலும் 5 தொழிலாளா்களுக்கு சிறு காயங்களுடன் ஸ்ரீபெரும்புதூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.