ஜப்பான் கப்பலில் உள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3,711 பேருடன் சென்ற ‘டைமண்ட் பிரின்ஸஸ்’ என்ற அந்த சொகுசு கப்பல் கடந்த வார தொடக்கத்தில் ஜப்பானிய கடற்கரைக்கு வந்து சோ்ந்தது. அந்தக் கப்பலில் பயணம் செய்தவா்களில் 2 இந்தியா்கள் உள்பட 174 பேருக்கு ‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில், ஜப்பான் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசுக்கப்பலில் கரோனா வைரஸ் பாதித்த பயணிகளின் எண்ணிக்கை 150-ஐ தாண்டி விட்டதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்!
கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஜப்பான் கப்பலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும் தவித்து வருகின்றனர். அவர்களை கப்பல் நிர்வாகம் கவனித்துக் கொள்கிறது என்றாலும் கூட அவர்களையும் பிற இந்தியர்களையும் உடனடியாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.