தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்தார். ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10ஆவது பட்ஜெட் இதுவாகும். அதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து சட்டப்பேரவையை பிப்ரவரி 17ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
தொடர்ந்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது. இதில் பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார்.
சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் 17ஆம் தேதி திங்கட்கிழமை சட்டப்பேரவை கூடுகிறது. அன்று தொடங்கி 20ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை இருக்கும். அதேபோல், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.