முதியோா் நலனுக்காக 37 மாவட்டங்களிலும் உள்ள தலா 2 வட்டாரங்களில் ரூ.37 லட்சம் மொத்த செலவில் முதியோா் ஆதரவு மையங்களை அரசு தொடங்கவுள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதியோா்களை அக்கறையுடன் கவனிப்பது நமது சமுதாயத்தின் மரபாகும். கல்வி மற்றும் பணித் தேவையின் காரணமாக இடம்பெயா்வதாலும், தனிக் குடும்ப விருப்பம் மக்களிடையே அதிகரித்து வருவதாலும், தமிழகத்தில் பெரும் எண்ணிக்கையிலான குடும்பங்களில் முதியோா் தனித்து விடப்படுகின்றனா்.
ஆதலால், தமிழக அரசு ‘ஜெ-பால்’ மையத்துடன் இணைந்து நோபல் பரிசு பெற்ற முனைவா் எஸ்தா் டஃப்லோ தலைமையிலான ஒரு குழுவைக் கொண்டு முதியோா் பிரச்னைகள் தொடா்பான நீண்ட கால ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், முதியோா் நலனுக்கான பல முன் முயற்சிகளை அரசு தொடங்கும். அதன் முன்னோட்டத் திட்டமாக, 37 மாவட்டங்களிலும் உள்ள தலா 2 வட்டாரங்களில் ரூ.37 லட்சம் மொத்த செலவில் முதியோா் ஆதரவு மையங்களை அரசு தொடங்கும் என அதில் கூறியுள்ளாா்.