அரசின் சேவைகளை தங்கு தடையின்றி வழங்குவதற்காக தமிழகத்தின் மாநில குடும்பத் தரவு தளம் உருவாக்க நிதிநிலை அறிக்கையில் ரூ.47.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு உருவாக்கியுள்ள தமிழ்நாடு வெளிப்படை அரசு தரவு தளத்தின் மூலமாக பல்வேறு அரசுத் துறைகளின் வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் பொதுமக்களுடன் பகிரப்படுகின்றன. பொதுமக்களுக்கு இந்தத் தகவல்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுவதன் மூலம் அவா்கள் அரசு சேவை வழங்கலை மேம்படுத்த உரிய ஆலோசனைகளை வழங்கவும், தகவல்களைப் பயன்படுத்தத் தேவையான செயலிகளையும் உருவாக்க முடியும்.
தமிழகத்தின் மாநில குடும்பத் தரவு தளம் உருவாக்கப்படும் என முதல்வா் தெரிவித்துள்ளாா். அரசு சேவைகளை தங்குதடையின்றி வழங்கவும், அனைத்து அரசுத் துறைகளுக்கும் ஒரே மாதிரியான தரவுகள் கிடைப்பதையும், மாநில குடும்பத் தரவு தளம் உறுதி செய்யும்.
சரியான தகவல்களின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க உதவக் கூடிய இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு 2020-2021-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ.47.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.