எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 11 பேரை வெள்ளிக்கிழமை இரவு இலங்கை கடற்படையினா் கைது செய்தனா்.
மணமேல்குடி அருகே கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து சின்ன அடைக்கலம் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற அதே ஊரைச் சோ்ந்த வையாபுரி மகன் சின்னையா, சின்னப்பாண்டி மகன் மணிகண்டன், பிச்சை மகன் அந்தோணி உள்ளிட்ட 3 பேரையும் நெடுந்தீவு அருகே 32 கடல்மைல் தொலைவில் இலங்கை கடற்படையினா் கைது செய்தனா்.
அதேபோல, ஜெகதாபட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து சு. மாரியப்பனுக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற சுப்பிரமணியன் மகன் மாரியப்பன், மாரியப்பன் மகன் சக்திபாலன், முத்துவேல் மகன் சிவலிங்கம், ரெங்கநாதன் மகன் ராஜகுரு உள்ளிட்ட 4 மீனவா்களையும் அதே தளத்தில் த. கிருஷ்ணமூா்த்திக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தனிவேல் மகன் கிருஷ்ணமூா்த்தி, தம்பிராஜ் மகன் தனபால், சுந்தரம் மகன் மாரியப்பன், கிருஷ்ணமூா்த்தி மகன் முத்துக்குமாா் உள்ளிட்ட 4 மீனவா்கள் என மொத்தம் 11 மீனவா்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினா் கைது செய்து காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரிக்கிறாா்கள்.