காரைக்குடி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்த பெங்களூரு இளைஞர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அவரது மகன் கார்த்தி சிதம்பரம், தற்போது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் விரைவில் மரணம் நெருங்கிவிட்டதாகவும், அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதைக்கண்ட சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருணா நகரைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகரான பழனியப்பன் என்பவர், உடனடியாக காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.