வேதாரண்யேசுவரர் கோயிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேசுவரர் கோயிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீகத் திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா
தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேசுவரர் கோயிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீகத் திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் ரிக், யஜூர்,சாம,அதர்வண ஆகிய நான்கு வேதங்களும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும், பின்னர், கோயிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்றதாகவும் செவிவழித் தகவலாக கூறப்பட்டு வருகிறது.

பின்னாளில், இந்தக் கோயிலுக்கு வந்த சமயக் குரவர்கள் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய இருவரும் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடியதால் கதவு மீண்டும் திறந்ததாகவும் கோயில் தல புராணத்தில் கூறப்படுகிறது. இதில் அப்பர் கதவைத் திறக்கவும், சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம். இதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகப் பெருவிழாவின்போது, தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு விழாவானது புதன்கிழமை இரவு நடைபெற்றதையொட்டி, பிரதான கதவின் எதிரே அப்பர், சம்பந்தர் ஆகியோர் எழுந்தருள, இவர்களாக உருவகப்படுத்தப்பட்ட ஓதுவா மூர்த்திகள் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடினர்.

அப்போது, கோயில் கதவு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து திறக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். முன்னதாக அப்பர், சம்பந்தர் வீதியுலா நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை ஜி.கே. அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com