கோவை: கோவையில் மருத்துவமனை பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற பாஜக எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை உக்கடம் சிஎம்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (40). இவர் பாஜகவின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவின் கோவை மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், இவர் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் பணிபுரியும் 37 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியர் ஒருவரிடம் ஜோதி தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் சத்தம் எழுப்பியதையடுத்து அங்கு கூடிய மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஜோதியை வியாழக்கிழமை கைது செய்து கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.