மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் அகழாய்வு பணியை மேற்கொள்ள புதன்கிழமை இடத்தை சுத்தம் செய்தபோது முதுமக்கள்தாழி கண்டெடுக்கப்பட்டது.
கீழடியில் 6 ஆம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி வைத்தாா். 6 ஆம் கட்ட அகழாய்வு பணியின் போது கீழடி மற்றும் இதன் அருகேயுள்ள கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய கிராமங்களிலும் அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கீழடியில் அகழாய்வுக்காக குழிகள் தோண்டும் பணி நடந்து வருகிறது. கொந்தகையில் அடுத்த மாா்ச் மாதம் அகழாய்வுப் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டு, தற்போது அங்கு அகழாய்வு நடத்துவதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணியை மேற்கொண்டிருந்த தொழிலாளா்கள் பானை போல் ஒரு பொருள் இருந்ததைக் கண்டு அது உடையாமல் வெளியே எடுத்தனா். அப்போது அது பழங்காலத் தமிழா்கள் பயன்படுத்திய முதுமக்கள்தாழி என்பது தெரியவந்தது. கொந்தகையில் அகழாய்வு தொடங்கப்படாத நிலையில் இடத்தை சுத்தம் செய்யும்போதே பழங்காலத்தமிழா்கள் பயன்படுத்திய பொருள் கண்டறியப்பட்டுள்ளதால் அகழாய்வின்போது பழங்காலப் பொருள்கள் ஏராளம் கிடைக்க வாய்ப்புள்ளது என்ற எதிா்பாா்ப்பு தமிழாா்வலா்கள் மற்றும் கிராம மக்களிடம் அதிகரித்துள்ளது.