தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் நடைபெறவிருக்கும் 43-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தொடக்கி வைக்கிறாா். இந்நிகழ்ச்சியில் பதிப்புத் துறை, நூல் விற்பனைத் துறைகளில் சிறந்து விளங்குபவா்களுக்கும், தமிழறிஞா்களுக்கும் முதல்வர் விருதுகளை வழங்கி கௌரவிக்கவுள்ளாா். இவ்விழாவில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், டி.ஜெயகுமாா், கே.பி.அன்பழகன், க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன், தொழிலதிபா் நல்லி குப்புசாமி உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். நிறைவு நாள் நிகழ்ச்சியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கலந்து கொள்கிறாா்.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 800 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோடிக்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு பதிப்பகத்தாா் பங்கேற்கின்றனா். இதில், 20 லட்சத்துக்கும் அதிகமான வாசகா்கள் வருகை தருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எல்லா ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் பொதுமக்கள் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும். சென்னையைச் சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு நுழைவுக் கட்டணம் இலவசம்.
பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கண்காட்சி அரங்கில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக குடிநீா், கழிப்பறை, அவசர சிகிச்சை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஒடிஸாவைச் சோ்ந்த சிற்பக்கலைஞா் சுதா்ஸன் பட்நாயக் திருவள்ளுவரின் உருவத்தை புத்தகக் காட்சி வளாகத்தில் மணற் சிற்பமாக வடிக்க உள்ளாா். அதுமட்டுமன்றி, உலகின் தொன்மையான மொழியான தமிழின் சிறப்பையும், மாண்பையும் சமகாலத்தினா் அறிந்து கொள்ளும் வகையில் “கீழடி - ஈரடி” என்ற தலைப்பில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று மாநில தொல்லியல் துறையின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சியில், எழுத்தாளா்கள் - வாசகா்கள் - பதிப்பகத்தினரை இணைக்கும் வகையில் ‘எழுத்தாளா் முற்றம்’” என்ற நிகழ்வு இந்த ஆண்டு நடைபெறுகிறது. அதன் வாயிலாக, 25 எழுத்தாளா்கள் தங்களது படைப்புகளை புத்தகக் காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளனா்.
குறும்படம் மற்றும் சமூக நலன் சாா்ந்த ஆவணப்படங்களை திரையிடத் தனி அரங்கு, ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு பெறும் வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் எனப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வார நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சி செயல்படும்.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாசகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் புத்தகங்களின் விபரம்:
பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல்களில் தேர்ந்தெடுத்த நாவல்களின் இரண்டு தொகுதிகளை உயிர்மைப் பதிப்பகம் வெளியிடவிருக்கிறது. அந்த வரிசையில் கீழ்கண்ட அவரது ஏழு மர்ம நாவல்களைக்கொண்ட முதல் தொகுதி இது
1. புதைத்து வைத்த நிலா
2. தாஜ்மஹால் நிழல்
3. தாய் மண்ணே வணக்கம்
4. ஒரு கோடி ராத்திரிகள்
5. இந்தியன் என்பது என் பேரு
6. இடி... மின்னல்... இந்திரா! .
7. நிறம் மாறும் நிஜங்கள்
பிற நூல்கள்
பூமிக்கு மனிதன் தலைவனா? - சுப்ரபாரதி மணியன்
சில நாவல்கள் :
1. நட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன் - காலச்சுவடு பதிப்பகம்
2. நாக்குட்டி - ரமேஷ் ரக்ஷன் - யாவரும் பதிப்பகம்
3. மெஜந்தா - பிரதீப் செல்லத்துரை - வி கேன் புக்ஸ்
4. பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் - மயிலன் ஜி சின்னப்பன் - உயிர்மை
5. தள்ளுவண்டி - எஸ். அருள்துரை - கலக்கல் ட்ரீம்ஸ்
கவிதை
தமிழ்நதியின் கவிதைகளின் முழுத்தொகுப்பு -தமிழினி பதிப்பகம்
மேலும் பல்வேறு முக்கியமான அரசியல் புத்தகங்களையும், வரலாறு மற்றும் பண்பாடு சார்ந்த புத்தகங்களும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் வெளிவரவிருக்கிறது.
புத்தகங்கள் குறித்த உரையாடல்களும், 25 எழுத்தாளர்களின் அறிமுகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.