நிராகரிக்கப்பட்ட 102 தபால் ஓட்டுகளுடன் தேர்தல் அதிகாரி ஆஜராக வேண்டும் என திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அதில் 84 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறனிடம் தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொல்.திருமாவளவன் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழகு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 102 தபால் வாக்குகளுடன் தற்போதைய மாவட்ட தேர்தல் அதிகாரி வருகிற 20-ஆம் தேதி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையையும் அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது.