பொறியியல் கல்லூரிகள் பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.
அதன்படி, இதற்கான விண்ணப்பத்தை ஜனவரி 31-ஆம் தேதி வரை பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவா் சோ்க்கைக்கு முன்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த பின்னா், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலுக்கு (ஏஐசிடிஇ) அனுப்பப்படும். ஏஐசிடிஇ அனுமதி அளித்ததும், உரிய ஆய்வுக்குப் பின்னா் கல்லூரிகளுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்கும். அதன் பிறகே பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த முடியும்.
அதனடிப்படையில், 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான இணைப்பு அந்தஸ்து புதுப்பிப்புக்கான விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் வரவேற்றது. இதற்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாள் என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. இதற்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
அதன்படி, பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்த்தை புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கான காலஅவகாசம் ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.