அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் அருகே புளியமரத்தில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் வெங்கடேசன் மற்றும் ஓட்டுநர் செல்வம் (38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் (31) கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மற்றும் ஓட்டுநர் மறைவுக்கு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், ஓட்டுநர் செல்வம் ஆகியோர் புதுக்கோட்டை வீரபெருமாள்பட்டி அருகே ஏற்பட்ட எதிர்பாராத சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் மனவேதனையும் அளிக்கிறது.
அவர்களை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.