கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த வண்டிப்பாளையம் கிராமத்தின் அருகே சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர தடுப்பில் கார் மோதியதில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
திண்டுக்கல் சிலுவை தெருவை சேர்ந்த மல்லிகா, நிஷா, அவருடைய குழந்தைகள் இரண்டு பேர், கார் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
இன்று காலை வண்டிப்பாளையம் கிராமம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையோர தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கார் தடுப்புக் கட்டையை தாண்டி நெடுஞ்சாலையில் தடம் புரண்டு விழுந்தது.
அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த தனியார் பேருந்து கார் மீது நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த மல்லிகா, நிஷா, 3 வயது குழந்தை மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரின் உள்ளே ஒரு குழந்தை பலத்த காயத்துடன் உயிருடன் இருந்தது. அந்த குழந்தையை திருநாவலூர் போலீசார், ஜேசிபி இயந்திரத்தை வைத்து கார் மேல் இருந்த தனியார் பேருந்தை தள்ளி விட்டு, காரின் உள்ளே விபத்தில் சிக்கிக்கொண்ட குழந்தையை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் இறந்து கிடந்த 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். தனியார் பேருந்தில் இருந்த 24 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இந்தக் கோர விபத்தால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.