பல சிக்கல்களுக்கிடையே பாஸ்டேக்: தீர்வுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள்

சுங்கக் கட்டண வசூலில் "பாஸ்டேக்' முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சுங்கச்சாவடிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
பல சிக்கல்களுக்கிடையே பாஸ்டேக்: தீர்வுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகள்

சென்னை: சுங்கக் கட்டண வசூலில் "பாஸ்டேக்' முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சுங்கச்சாவடிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றுக்கு விரைவில் தீர்வு காண வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை, நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் வாகனங்கள் கடந்து செல்கின்றன. கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதோடு, சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்கவும், கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், "பாஸ்டேக்' எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியது. இதற்காக, சுங்கச்சாவடிகளுக்கு, சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
 கால அவகாசம் நீட்டிப்பு: முன்னதாக, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவது கட்டாயம் என அறிவித்திருந்த நிலையில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இத்திட்டத்தை அமல்படுத்துவதை, மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) உத்தரவிட்டது. இதன்படி, சுங்கச்சாவடிகளில் உள்ள வழித்தடங்களில் ஒன்றில் மட்டும் பணப் பரிவர்த்தனை செய்து வாகனம் கடக்க அனுமதிக்கப்படும். மற்றவற்றில் "பாஸ்டேக்' அட்டை கொண்ட வாகனம் மட்டுமே கடக்க முடியும். வாகன நெரிசல் அதிகரித்தால் அதற்கேற்ப வழித்தடங்கள் திறக்கப்படும். மேலும், ஜனவரி 15-ஆம் தேதி முதல் அனைத்து வழித்தடங்களிலும் "பாஸ்டேக்' பயன்படுத்தும் வாகனங்கள் மட்டுமே கடக்க முடியும் என கூறப்பட்டிருந்தது.
 விற்பனை மையங்கள்: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் வாகன ஓட்டிகள் "பாஸ்டேக்' அட்டை பெற தனியாக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் எளிதாக "பாஸ்டேக்' அட்டை பெற வசதி செய்யப்பட்டு உள்ளது. தனியார் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் "பாஸ்டேக்' அட்டை வாகன ஓட்டிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
 போக்குவரத்து நெரிசல்: மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சில வழித்தடங்களில் மட்டும் பணப் பரிவர்த்தனை மூலம் வாகனத்தைக் கடக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுங்கச்சாவடியில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு முன்பே தடுப்புகள் அமைத்து, ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து "பாஸ்டேக்' ஒட்டப்பட்ட வாகனங்களைத் தனியாகப் பிரித்து, அதற்கான வழித்தடத்தில் அனுப்பப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளிடையே குழப்பம் ஏற்படுகிறது.
 சர்வர் கோளாறு: "பாஸ்டேக்' அட்டையை ஸ்கேன் செய்யும் சென்சார் பல மையங்களில் செயல்படவில்லை. இதனால் பெரும்பாலான இடங்களில் உள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களிடம் உள்ள கருவி மூலம் "பாஸ்டேக்' அட்டையை ஸ்கேன் செய்து கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
 இது தொடர்பாக லாரி ஓட்டுநர் ராஜ்நாத் என்பவர் கூறியது: சென்னை, கிருஷ்ணகிரி, கோவை இடையே தினசரி பார்சல் பொருள்கள் கொண்டு செல்கிறேன். ஆனால் பல சுங்கச்சாவடிகளில் உள்ள "சென்சார்' சரியாக வேலை செய்வது கிடையாது. இதன் காரணமாக, பல சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வாகனம் காத்து நிற்க வேண்டி உள்ளது. சுங்கச்சாவடிகளில் இத்திட்டத்தை அமல்படுத்துவதை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியபோதே, இதுபோன்ற சிக்கல்களைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்னை பெரும்பாலான மையங்களில் காணப்படுவதாக சக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர் என்றார்.
 முறைகேடு புகார்: முதல்நாள் சென்ற சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்ட அதே தொகை மறு தினமும் அங்கு செல்லாமலே வங்கிக் கணக்கில் இருந்து பெறப்படுவதாக வாடகை கார் ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
 இது தொடர்பாக சிஐடியூ நிர்வாகி சம்பத் கூறியது: பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணமாகும் சுங்கச்சாவடிகளில் பெறப்பட்ட தொகை மறுதினமும் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்படுகிறது. ஏற்கெனவே பெரும்பாலான வாடகைக் கார் நிறுவனங்கள் சுங்கத் தொகையைக் கட்டணத்துடன் வசூலிக்கும் வகையில் செயலியில் மாற்றம் செய்யவில்லை. இதனால் வாடிக்கையாளர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் சிக்கல் நிலவி வருகிறது. இதற்கிடையே தற்போது கூடுதலாக இந்தப் பிரச்னையும் ஏற்பட்டுள்ளது.
 அட்டையாக வழங்கலாம்: இதற்குத் தீர்வு காண கடன் அட்டை போன்ற அளவில் பாஸ்டேக்கை அளிக்கலாம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இவ்வாறு வழங்கினால் நமது அனுமதியின்றி வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகாது. நம் கட்டுப்பாட்டில் பாஸ்டேக் இருக்கும் என்றார் அவர்.
 பாஸ்டேக் தாமதம்: பதிவு செய்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பாஸ்டேக் அட்டை கிடைக்கவில்லை என பலரும் புகார் தெரிவிக்கும் நிலையில், தற்போது பதிவு செய்வோரிடம் ஏஜென்சிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது குறித்து புகார் அளிக்க எந்தவித எண்ணும் வழங்கப்படவில்லை. மின்னஞ்சல் அனுப்பி பல நாள்களாகியும் முறையாக பதில் கிடைக்கவில்லை என லாரி ஓட்டுநர் ரமேஷ் தெரிவித்தார்.
 கோளாறுகளை சரி செய்ய உத்தரவு: இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கபிலன் தாக்கல் செய்த மனுவில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்க அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்டேக் முறையில் இருமடங்கு கட்டணம் செலுத்தினால்தான் சுங்கச்சாவடியை கடக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பாஸ்டேக் கட்டண முறை தொடர்பான அறிவிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
 இந்த வழக்தை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவதில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.
 வாகன ஓட்டிகள் கோரிக்கை: சுங்கச்சாவடிகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், கால விரயம், ஊழியர்களுடனான வாக்குவாதம் உள்ளிட்டவற்றை தடுக்கவே "பாஸ்டேக்' முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது இந்தப் பிரச்னைகள் அனைத்தும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போது உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ள நிலையில் விரைவில் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
 - செ.ஆனந்த விநாயகம்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com