புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சொகுசு கார் சாலையோர மரத்தில் மோதியதில், சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அன்னவாசல் அருகேயுள்ள பரம்பூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வெங்கடேசன் (31). இவர், அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தனி உதவியாளராகவும், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்டத் தலைவராகவும் இருந்து வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அமைச்சரை வழியனுப்பிவைத்துவிட்டு சொகுசு காரில் வெங்கடேசன் தனது சொந்த ஊரான பரம்பூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டியை இடையபட்டியைச் சேர்ந்த செல்வம்(38) ஓட்டினார்.
இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வெங்கடேசன், ஓட்டுநர் செல்வம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையறிந்த பொதுமக்கள், இருவரது சடலத்தையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேசனின் இறுதிச்சடங்கில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், எம்எல்ஏ ரத்தினசபாபதி (அறந்தாங்கி), ஆறுமுகம் (கந்தர்வகோட்டை) ஆகியோர் கலந்து கொண்டனர். விபத்து குறித்து, அன்னவாசல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.