சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பணியில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திடம், ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகளும் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமியை சந்தித்தனர்.
வில்சனின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய தமிழக முதல்வர், தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையான ரூ.1 கோடிக்கான காசோலையை வில்சனின் மனைவியிடம் வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் புதன்கிழமை இரவு மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
கேரள எல்லையோரப் பகுதியான களியக்காவிளையில் சந்தை சாலையில் சோதனைச் சாவடி உள்ளது. இங்கு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் புதன்கிழமை இரவு பணியில் இருந்தாா். அந்தப் பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், அங்குள்ள பள்ளிவாசல் பகுதிக்குள் இருந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 போ், கைத்துப்பாக்கியால் (பிஸ்டல்) வில்சனை சுட்டுவிட்டு, கேரளம் செல்லும் சாலை வழியாக தப்பி விட்டனராம். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த வில்சன், குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.