சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம்-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ஆம் தேதியன்று இரவு 8 மணி முதல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு 9.30 மணியளவில் அங்கு வந்த இரண்டு பேர் வில்சனை கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே இந்த கொலை சம்பவத்தில், தொடர்புடையவர்களின், புகைப்படங்களை வெளியிட்டு, தமிழக காவல்துறையினர் 10 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் சமீம், தௌபிக் ஆகியோரை கர்நாடகா மாநிலம் உடுப்பி ரயில் நிலையம் அருகே, அம்மாநில காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.