புதுச்சேரியைச் சேர்ந்த பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைவர் நமச்சிவாயம் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
தொடர்ந்து கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளிலும், ஆட்சி கவிழ்க்கும் சதிச்செயலிலும் ஈடுபட்டு வந்த பாகூர் எம்எல்ஏ தனவேலு பற்றி அகில இந்திய தலைமையில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி யார் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாலும் கட்சி அதை வேடிக்கை பார்க்காது. அதன்படி கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட பாகூர் எம்எல்ஏ கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம் அறிவித்தார்.
இந்த நிலையில், தன்னை தகுதி நீக்கம் செய்ய கட்சித் தலைவருக்கு அதிகாரிமில்லை என பாகூர் எம்எல்ஏ தனவேலு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
என்னை கட்சியிலிருந்து தகுதி நீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க புதுச்சேரி காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரமில்லை. சோனியா மற்றும் ராகுல் தான் என் மீது நடவடிக்கை எடுக்கலாம். லஞ்சம் ஊழல்களை வெளிக் கொண்டு வந்த என்னை இதுவரை முதல்வர், அமைச்சர்கள் யாரும் அழைத்துப் பேசவில்லை. ஊழல் இல்லை என முதல்வர், அமைச்சர்கள் கூறுவது தவறு. அவர்களை திசைத் திருப்ப முயற்சி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.