கும்மிடிப்பூண்டி அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கவரைப்பேட்டை முதல் பெத்திக்குப்பம் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் இப்பணிகள் பாதிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சென்னை அயனாவரத்தைச் யுகேஷ் குமார் (29), ரெட்டேரியைச் சேர்ந்த பீபின் (29), கொளத்தூரைச் சேர்ந்த யுவராஜ் (29), சித்திக் (31) ஆகிய 4 பேரும் காரில் ஆந்திரா சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மேம்பாலம் அருகே தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே யுகேஷ்குமார், பீபின் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த இருவரையும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.