போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி, 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இளம்பிள்ளை வாதம் எனப்படும் போலியோவை ஒழிப்பதற்காக, 1994-இல் இருந்து ஆண்டுதோறும், ஜனவரி, மாா்ச் ஆகிய மாதங்களில் இரண்டு தவணையாக ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தொடா் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் போலியோ பாதிப்பு முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. இதனால், கடந்த ஆண்டு முதல் ஒரு தவணையாக மட்டுமே சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நிகழாண்டுக்கான தேசிய அளவிலான போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19-ஆம் தேதி நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில், 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.