கன்னியாகுமரி: அரசு பழத்தோட்ட சுற்றுச்சூழல் பூங்காவில் 4 நாள்களாக நடைபெற்ற மலர் கண்காட்சியை 17 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.
கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் உழவர் தினத்தை முன்னிட்டு கடந்த 16-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை 4 நாள்கள் மலர் கண்காட்சி நடைபெற்றது.
இதற்காக பெங்களூர், ஊட்டி ஆகிய இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 500 மலர் வகைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது. காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை நடைபெற்ற மலர் கண்காட்சியை 17 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரியவர்கள் 14 ஆயிரம் பேரும், சிறியவர்கள் 3 ஆயிரம் பேரும் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 8 லட்சத்து 53 ஆயிரத்து 105 வசூலானது.