நாகர்கோவில்: களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தெளபிக் ஆகியோரை போலீஸ் காவலுக்கு அனுப்புவது குறித்து நாளை (ஜன.21) பிற்பகல் 3 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8 ஆம் தேதி சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக குமரி மாவட்டம் விதாங்கோட்டையை சேர்ந்த அப்துல் சமீம் மற்றும் நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த தௌபீக் ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். கடந்த 16 ஆம் தேதி குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் . இந்நிலையில் அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள் கிழமை ஆஜர்படுத்தினர்.
அவர்களை 28 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனு செய்யப்பட்டது. இதற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி அருள்முருகன் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸ் காவலுக்கு அனுப்புவது குறித்து நாளை பிற்பகல் 3. மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.