சென்னை: பெரியார் குறித்துப் பேசிய விவகாரத்தில் உண்மை தெரிந்தவுடன் ரஜினி மன்னிப்புக் கேட்பார் என்று திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
துக்ளக் 50-ஆவது ஆண்டு விழாவில் நான் பேசியது உண்மை, எனவே அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் செவ்வாயன்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
துக்ளக் 50-ஆவது ஆண்டு விழாவில் எனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதை உருவ பொம்மைகள் உடையின்றி, செருப்பு மாலை அணிவித்து கொன்டுவரப்பட்ட செய்தி அவுட்-லுக் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
எனவே இதை நான் ஆதாரத்துடன் இங்கு குறிப்பிடுகிறேன். எனவே நான் உண்மையை தான் கூறினேன், இல்லாததை கற்பனையாக குறிப்பிடவில்லை. இதற்கு நான் மன்னிப்பு கேட்கவும், வருத்தம் தெரிவிக்கவும் முடியாது.
இது மறுக்கக் கூடிய சம்பவமில்லை, ஆனால் மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெரியார் குறித்துப் பேசிய விவகாரத்தில் உண்மை தெரிந்தவுடன் ரஜினி மன்னிப்புக் கேட்பார் என்று திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
செவ்வாயன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது
ரஜினிகாந்த் விஷயம் தெரியாமல் இப்படி எதாவது பேசி மாட்டிக்கொள்கிறார். அவர் அரசியலுக்கு வந்த பின்னர் இதுகுறித்து நான் பதிலளிப்பதுதான் சரியாக இருக்கும். முன்பு கூட காவிரி விவகாரம் தொடர்பாக இங்கு பேசி விட்டு அங்கு பிரச்னை பெரிதானவுடன் கர்நாடகம் சென்று மன்னிப்புக் கேட்டார் என்று நினைக்கிறன். அதேபோல் இப்போதும் உண்மை தெரிந்தவுடன் மன்னிப்புக் கேட்பார்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.