மதுரை: தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் குடமுழுக்கை தமிழில் நடத்த உத்தரவிடக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தஞ்சை பெரிய கோயிலில் கடைசியாக எந்த மொழியில் குடமுழுக்கு நடைபெற்றது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, சமஸ்கிருத மொழியில் என்று கோயில் நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட மனுதாரர், அப்போது தமிழ் மந்திரங்கள் தெரிந்தவர்கள் இல்லை. ஆனால் இப்போது தமிழில் அர்ச்சனை செய்ய பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் தஞ்சை பெரிய கோயில் நிர்வாகத்தை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.