தை அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன. 24) கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்தனர். இதையொட்டி பகவதியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்துக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து ஆடி மற்றும் தை அமாவாசை நாள்களில் கடல், ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி பலிகர்ம பூஜை செய்து வழிபடுவது வழக்கம். தை அமாவாசை தினமான வெள்ளிக்கிழமை அதிகாலையில் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் அங்குள்ள வேத விற்பன்னர்களிடம் தங்கள் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்தனர். தொடர்ந்து கடற்கரையில் அமைந்துள்ள பரசுராம விநாயகர் கோயில் மற்றும் பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரம்: பகவதியம்மன் கோயிலில் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தான நடை திறக்கப்பட்டு நிர்மால்யபூஜை, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, ஸ்ரீபலிபூஜை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தங்க ஆபரணம், வைரநகைகள், வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.