மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதுமுள்ள விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
'காவிரி டெல்டா பகுதிகள் விவசாயத்திற்கு உயிர்நாடியாக இருக்கிறது. இப்பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். நிலமே தரிசாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை உருவாகும். எனவே மத்திய அரசின் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என்று அவர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வழக்கை அவசர வழக்காக நாளைய தினமே விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.