கோவையில் 13 வயது சிறுமி வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் அரை கிலோ தலைமுடி மற்றும் ஷாம்பு பாக்கெட்கள் உள்ளிட்டவை வெற்றிகரமாக நீக்கப்பட்டன.
உறவினர் மரணத்தால் 7-ஆம் வகுப்பு பயின்று வந்த கோவையைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர், கடந்த சில மாதங்களாக அவ்வப்போது வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் தலைமுடி இருப்பதைக் கண்டறிந்தனர்.
எனவே அவருக்கு எண்டோஸ்கோபி முறையில் திங்கள்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறுமியின் வயிற்றில் இருந்து அரை கிலோ தலைமுடி மற்றும் ஷாம்பு பாக்கெட்கள் உள்ளிட்டவை நீக்கப்பட்டு, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிவடைந்தது.
''சிறுமி அவ்வப்போது தலைமுடி விழுங்கும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இது நாளடைவில் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றரை மணிநேரத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது அந்த சிறுமி உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது'' என்று மருத்துவர் தெரிவித்தார்.