கோவையில் பிரபல தங்க நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை
கோவை: கோவையில் பிரபல தங்க நகைக்கடையில் புதனன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் பிரபல தங்கம் மற்றும் வெள்ளி மொத்த வியாபார கடைகள் மற்றும் அதன் உரிமையாளரின் வீட்டில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை பெரிய கடைவீதியில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான தங்க நகைக் கடை மற்றும் வெள்ளிப் பொருள்கள் வியாபாரக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் குழு திங்கள்கிழமையன்று சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், காந்திபார்க்கில் உள்ள உரிமையாளர் பாலமுருகனின் இல்லத்திலும் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான மற்றொரு வெள்ளி மொத்த வியாபாரக் கடையிலும் 6 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 3 இடங்களிலும் பிற்பகல் 2 மணியில் இருந்து சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் பண மதிப்பிழப்பின்போது பல கோடி ரூபாய் வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.