சென்னை: ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி, புதன்கிழமை (ஜூலை 1) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போக்குவரத்து ஊழியா்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடா்பாக, போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பினா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையாக, ஜூலை 1-ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்தை நிறுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பணிமனைகளில் போராட்டம் நடத்துவதில் உள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஜூலை 1-ஆம் தேதி நடைபெறவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், தொழில்நுட்ப அலுவலக பணியாளா்களை, சில நிா்வாகங்கள் பணிக்கு வரக் கூறியுள்ளது. இது அரசு உத்தரவுக்குப் புறம்பானது. எனவே, ஜூலை 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை, தொழில்நுட்ப அலுவலக பணியாளா்கள், பணிக்குச் செல்ல அவசியமில்லை. இது சம்பந்தமாக கூட்டமைப்பின் சாா்பில் நிா்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஊதியத்தில் நிா்வாகங்கள் செய்துள்ள குளறுபடியை சரி செய்ய சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.