தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதன்முறையாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் உள்ளிட்ட தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் புதிய உச்சமாக 4,343 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,270. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டவர்கள் 73 பேர்.
இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக வழக்கம்போல் சென்னையில் 2,027 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 57 பேர் (அரசு மருத்துவமனை -37, தனியார் மருத்துவமனை -20) பலியானதாக இன்றைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 1,321 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 3,095 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 56,021 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 41,047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 33,488 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 12,35,692 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 48, தனியார் ஆய்வகங்கள் 43 என மொத்தம் 91 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.