என்.எல்.சி. நிறுவனத்தில் கொதிகலன் வெடித்ததில் உயிரிழந்த 6 பேர் குடும்பத்துக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதாக என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்குவதாகவும் என்.எல்.சி நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 2-வது அனல் மின் நிலையத்தின் 5-வது அலகில் புதன்கிழமை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கொதிகலன் வெடித்து தீப்பிடித்தது. இதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்குவதாகவும் என்.எல்.சி. நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் இதில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.