மதுரை: சாத்தான்குளம் தலைமைக் காவலர் தேவதியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் மதுரை உயர் நீதிமன்ற கிளை, அவருக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் தொடர்பான வழக்கில், காவல்நிலையத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நீதித்துறை நடுவரிடம் நேரடியாக வாக்குமூலம் அளித்தவர் தலைமைக் காவலர் ரேவதி.
இவரது வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்தே, தந்தை - மகன் மரணம் தொடர்பான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனக்கும் தனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ரேவதி கேட்டுக் கொண்டதை அடுத்து, தந்தை - மகன் மரணம் தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணை நடத்தி வரும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தலைமைக் காவலர் ரேவதிக்கும், அவரது குடும்பத்துக்கும் காவல்துறையினர் போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும் அவருக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் கருத்தைக் கூறினர்.
தந்தை - மகனை விடிய விடிய காவலர்கள் அடித்ததாகவும், இதனால் காவல் நிலைய டேபிள் மற்றும் லத்தியில் ரத்தக் கறை ஏற்பட்டதாகவும் தலைமைக் காவலர் ரேவதி வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.