பொன்னமராவதி அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுமி ஊரணி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியை சார்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஆலவயல் வட்டத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் காயத்ரி(11). செவ்வூர் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று முடித்த இவர் கரோனா பொதுமுடக்கத்தினால் பள்ளி விடுமுறை என்பதால் கொப்பனாபட்டி அழகு ஆச்சி குடிநீர் ஊரணிப்பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஊரணியின் மையப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதையறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்டு, உடனடியாக கொப்பனாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி உயிரிழந்தார். இது குறித்து பொன்னமராவதி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.