திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள கோபால்பட்டியைச் சேர்ந்த 45 வயது ஆண், தனியார் சேமியா தயாரிப்பு ஆலையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை காலை அவர் உயிரிழந்தார்.
இதேபோல் திண்டுக்கல் அடுத்துள்ள பாலம் ராஜாக்கப்பட்டியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி, கரோனா அறிகுறியுடன் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். எனினும், பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
திண்டுக்கல்லைச் சேர்ந்த மற்றொரு மூதாட்டி, மதுரை அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.