நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் மேலாளருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர், மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்ததை அடுத்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என 61 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. பின்னர் தற்காலிகமாக அந்த அலுவலகம் மூடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே, நிலக்கோட்டை மற்றும் செம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த அலுவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.