புது தில்லி: பிளாஸ்மா தானம் செய்யுமாறு அழைப்பு வந்தால், தயவு கூர்ந்து அதனை நிராகரிக்காதீர்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் காணொலி காட்சி வாயிலாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, தில்லி அரசு அமைத்திருக்கும் குழு, பிளாஸ்மா தானம் அளிக்குமாறு பொதுமக்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து வருகிறது. ஒரு வேளை உங்களுக்கு அவ்வாறு அழைப்பு வந்தால் தயவு கூர்ந்து அதனை நிராகரிக்காதீர்கள். மருத்துவமனைகளிலும் கரோனா பாதித்து குணமடைவோர், பிளாஸ்மா தானம் செய்யுமாறு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.
தாமாக முன் வந்து பிளாஸ்மா தானம் அளிப்பவர்களின் எண்ணிக்கையை விட பிளாஸ்மா தானம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. யாருக்கெல்லாம் பிளாஸ்மா தானம் அளிக்க தகுதி இருக்கிறதோ, அவர்கள் தாமாக முன் வந்து தானம் அளிக்க வேண்டும். இதனால், எந்த வலியோ, பலவீனமோ ஏற்படாது. பிளாஸ்மா தானம் அளிப்போர், இந்த சமுதாயத்துக்கு தன்னலமற்ற சேவையாற்றுவோராகவே கருதப்படுவார் என்றும் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.