தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா பாதுகாப்பு நிதியாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.
சமூக பாதுகாப்புத் திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக மத்திய அரசு சட்டம் 2016 இன் படி 25 சதவிகித நிதியுதவி வழங்க வேண்டும். தமிழக அரசின் ஆணைப்படி அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூ.1000 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் பி.தியாகராஜன் தலைமை வகித்தார். திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், அவர்களது உறவினர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.